செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (07:54 IST)

இவ்வளவு கேலிகள் வரும் என்று தெரிந்தாலும், மீண்டும் இந்தியன் 2 வாய்ப்பு வந்தால் நடிப்பேன் – பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு புதிய பாதைய வகுத்துக் கொடுத்தவர்தான் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதிலும் பிரியாவின் கதாபாத்திரம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் அவர் தனிப்பட்ட முறையிலும் ராசியில்லாத நடிகை என்று கேலிகளுக்கு ஆளானார்.

இதுபற்றி இப்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் “இந்த படம் வந்ததும் என்னைத் தனிப்பட்ட முறையில் நோகடிக்கும் அளவுக்கு கேலி செய்தார்கள். ஆனால் இவ்வளவு கேலிகள் வரும் என்று தெரிந்தாலும், மீண்டும் காலத்துக்குப் பின் சென்று இந்தியன் 2 படத்தில் நடிக்க அழைத்தாலும் நான் நடிப்பேன். நினைத்துப் பாருங்கள் ‘ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் கிடைக்கும் வாய்ப்பை தமிழ் சினிமாவில் எந்த நடிகையாவது மறுப்பாரா’. நாம் நினைக்கும் படி எல்லா படமும் ஓடாது. ரஜினி, கமல், விஜய் சார் போன்றவர்களுக்கே தோல்வி படங்கள் அமைந்துள்ளன” எனக் கூறியுள்ளார்.