1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (09:08 IST)

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக பிருத்விராஜ்… மலையாள திரையுலகம் ஆதரவு!

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பிருத்விராஜ் மீது சைபர் தாக்குதலை நிகழ்த்த ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு சட்டமன்றம் இல்லாததால் ஒன்றிய அரசே நிர்வாகியை நியமித்து வருகிறது.  இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் வர்மா, கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில் முக்கியமாக அங்கு குழந்தைகளின் உணவில் மாட்டிறைச்சி தடை, மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த தீவுகளில் உள்ள 60000 மக்களும் அவர் மேல் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து இப்போது அந்த அதிகாரியை மத்திய அரசு திரும்பி பெறவேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் லட்சத்தீவு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இருக்கும் நிலையில் நடிகர் பிருத்விராஜும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் குரலைப் பதிவு செய்திருந்தார். அதையடுத்து பலரும் அவரை விமர்சித்து பதிவுகளை எழுத ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட வசவுகளாக மாறிய அந்த பதிவுகளை அடுத்து இப்போது மலையாள திரையுலகினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து பேச ஆரம்பித்துள்ளனர்.