வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (21:00 IST)

நடிகர் சங்க தேர்தலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்.ஜிஆர். கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன.
 
தலைவர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் நடிகர் நாசரும், சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து கே.பாக்யராஜூம் போட்டியிடுகின்றனர். இருதரப்பினர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது தேர்தலுக்கு ஒரு திடீர் சிக்கல் எழுந்துள்ளது
 
நடிகர் சங்க தேர்தலை ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்துவது குறித்து காவல்துறை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், 'நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன்படி நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, ஒற்றுமையற்ற சூழல் நிலவுகிறது. நீதிபதிகளின் வீடுகள், முதலமைச்சர், அமைச்சர்கள் பயணிக்கும் பாதை என்பதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் என்பதால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே அங்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது நல்லது. 
 
இந்த கடிதம் கல்லூரி நிர்வாகம், தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மநாபன் ஆகியோர்களுக்கும் அனுப்பபப்ட்டுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இனிமேல் புதிய இடம் பார்த்து தேர்தல் நடத்த முடியுமா? அல்லது இதுகுறித்து நடிகர் சங்கம் நீதிமன்றம் செல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்