1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (11:00 IST)

மனோஜ் பாஜ்பாயுடன் புகைப்படம்… சர்ச்சைக் கமெண்ட்டுக்கு விளக்கம் அளித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பரவலாக கவனத்தை பெற்றது.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒரு படம் தான் 'ஒத்த செருப்பு. உலகிலேயே ஒரு படத்தை ஒருவரே இயக்கி, தயாரித்து நடித்த ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தபோது கோலிவுட் திரையுலகமே பார்த்திபனை பாராட்டி தள்ளியது ஞாபகம் இருக்கலாம்.

இந்த படத்திற்கு நடுவர்கள் வழங்கும் சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள நடிகர் பார்த்திபன் ’இந்த படத்துக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் இது. இந்த படத்தில் எனக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் எனக்கு உண்டு.’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற மனோஜ் பாஜ்பாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்த அவர் ‘சிறந்த நடிகர் விருது! பெற்றவருடன் பெறாதவர்’ என கேப்ஷன் கொடுக்க பார்த்திபனை பலரும் கமெண்ட்டில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ‘"அதாகப்பட்டது… ஆதங்கமாகப்பட்டது... ஆர்வமாக்கப்பட்டு... அதுவே க்ரியா ஊக்கியாகி பின் கிரியேட்டிவிட்டி ஆகி அதே சிந்தையாகி சித்தமாகி சிரத்தையாகி செயல் வடிவமாகிப் படைப்பாகிப் பரிசாகியும் விடுகிறது எனக்கு. முன் அடையாளமில்லாத நான் சினிமாவுக்குள் வந்ததே திறமை பாராட்டப்படுவதற்கே. அதற்கான உழைப்பே அஸ்திவாரம்.

இது ஒரு பக்கம்… நான் எந்தப் பதிவை இட்டாலும், “சிறந்த நடிகர் மனோஜ் பாயுடன்” என்று மொக்கையாக வெறும் செய்தியாக இடுதல் பிடிக்காது. அதில் ஏதேனும் hook point, எவ்வாறெல்லாம் அவ்வார்த்தைத் தொடர் கவனிக்கப்படுகிறது என்ற ஆர்வத்தில் தான் இட்டேனே தவிர, ஆதங்கத்தில் அல்ல. அது தவறாக அறிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், ஆயிரத்தில் 990 பேர் எழுதியிருக்கும் வாசகங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

மீதமுள்ள வாசகங்கள் …சோதனை முயற்சி போடும் போஸ்ட்டில் தேவையில்லையோ? அல்லது போஸ்ட்டே தேவையில்லையோ? என்றும் யோசிக்க வைக்கிறது. பூமி கூட 100 டிகிரி நேராகச் சுழலவில்லையே! 23.5 டிகிரி சாய்வாகத்தானே?" என விளக்கம் அளித்துள்ளார்.