பா ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக தற்போதிருக்கும் பா.ரஞ்சித் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.
சமீபத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்த படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்குப் பிறகு ரஞ்சித் சாரபட்டா பரம்பரை 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.