1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:11 IST)

காந்தாரா 2 பற்றி வதந்தியை பரப்பிய லெஜண்ட் பட நடிகை – தயாரிப்பு நிறுவனம் மறுப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் சம்பாதித்த படமாக காந்தாரா அமைந்துள்ளது எனப் பலரும் கூறிவருகின்றனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகையும் கடந்த ஆண்டு தமிழில் லெஜண்ட் படம் மூலமாக அறிமுகம் ஆனவருமான ஊர்வசி ரவுத்தேலா காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காந்தாரா 2 என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார். இதனால் காந்தாரா 2 வில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இதை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் மறுத்து “இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது” எனக் கூறியுள்ளனர்.