வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 மே 2020 (18:46 IST)

இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம். கமல்ஹாசன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியில் இருந்த நிலையில் அந்த நிம்மதியை குலைப்பது போல் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை திடீரென தமிழக அரசு உயர்த்தியது. 
 
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 
 
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம். 
 
கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது