1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (19:21 IST)

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை திமுக விலைக்கு வாங்கிவிட்டது: நடிகை ஜெயலட்சுமி

makkal
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை திமுக விலைக்கு வாங்கி விட்டது என்றும் கமல்ஹாசனை அதிக சம்பளத்திற்கு திமுகவினர் படங்களில் நடிக்க வைக்கின்றனர் என்றும் நடிகை ஜெயலட்சுமி பேசியுள்ளார்
 
சமீபத்தில் நடிகை ஜெயலட்சுமி மீது மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி சினேகன் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு விளக்கம் அளித்த ஜெயலட்சுமி கூறியிருப்பதாவது: 
 
நான் சினேகம் என்ற பெயரில் முறையான ஆவணங்களுடன் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். எங்கள் அறக்கட்டளை மூலம் நாங்கள் செய்யும் நற்பணிகள் அனைத்தையும் எங்களது அறக்கட்டளை பெயரில் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம். 
 
ஆனால் சினேகன் அவரது அறக்கட்டளை சார்பாக அப்படி எந்த விதமான நற்பணிகளையும் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக நான் பார்த்ததில்லை. சினேகன் கூறியது போல் அவரது தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த விதமான அழைப்புகளும் வரவில்லை. 
 
அரசியல் நோக்கத்தின் காரணமாக என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. என்னை தவறாக சித்தரிக்கும் விதமாக சினேகன் பேசியுள்ளார். இந்த பொய்யான குற்றச்சாட்டுக்குப் பின்னால் கமல்ஹாசனும் இருப்பதாக எனக்கு சந்தேகமாக உள்ளது. திமுக கமல்ஹாசனை வாங்கியுள்ளது. திமுகவும், மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்றுதான். திமுக அதிகப் பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமல்ஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. 
 
சினேகன் என் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அப்படி அவர் குற்றச்சாட்டை நிரூபிக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.