செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (14:10 IST)

ஃபெப்சி அமைப்பு வைக்கும் செக் : பிக்பாஸ் 2 தொடருமா?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறும் 10 சதவீத ஃபெப்சி ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 
பிக்பாஸ் சீசன் 1 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது பிப்க்பாஸ் 2 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி.யில் பிரம்மாண்ட செட் போட்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் 2 விற்காக 400க்கும் மேற்பட்டோர் செட் அமைத்தல், டெக்னீஷியன் உள்ளிட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, பிக்பாஸ் 2 செட்டில் 400 பணியாளர்களில் 41 பேர்(கமல் உட்பட) மட்டுமே தமிழகத்தை சார்ந்தவர்கள், என்பதால் இதனைக் கண்டித்து 41 பேரும் இனி பணிபுரிய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த 41 பேரில் கமலும் உள்ளதால், எங்களது உணர்வுக்கு மதிப்பளித்து அவர் இந்நிகழ்ச்சியில் பணிபுரிய மாட்டார் என நம்புவதாக செல்வமணி தெரிவித்தார். 

 
இதேபோல் பிக்பாஸ் முதல் சீசனிலும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கமல் 50 சதவீதம் தமிழக தொழிலாளரை பணியமர்த்த செய்து இந்த பிரச்சனைக்கு முடிவு தந்தார். அதே போல் இப்பொழுதும் இந்த பிரச்சனைக்கு முடிவு காண்பாரா? அல்லது ஃபெப்சி கோரிக்கையை ஏற்று நிகழ்ச்சியை விட்டு விலகுவாரா என்பது தெரியவில்லை.
 
இந்நிலையில், பெப்சி ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படவில்லை எனில், பெப்சி அமைப்பு போராட்டம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் அனைத்து பணிகளையும் பெப்சி முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, பணியாட்களை வட மாநிலங்களிலிருந்து அழைத்து வந்திருந்தாலும், படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகரணங்களும், தமிழ் திரையுலகிலிருந்தே வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதை நிறுத்திவிட்டால் பிரச்சனையை பேச பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் வருவார்கள் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கருதுவதாக தெரிகிறது. 
 
அப்படி தொழில்நுட்ப உபகரணங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால் படப்பிடிப்புகள் தடைபடும். எனவே, பிக்பாஸ் 2 தொடருமா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமே இல்லை பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.