இசைஞானி இளையராஜா சமீபத்தில் தனது வேலியண்ட் சிம்போனியை அரங்கேற்றம் செய்த நிலையில், லிடியன் நாதஸ்வரத்தை சிம்போனி எழுத சொன்னதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும், ஏராளமான பின்னணி இசைகளையும் அமைத்துள்ளார். எனினும் திரையிசையை தாண்டி சர்வதேச அளவில் இசையில் புதிய சாதனையை படைக்கும் அளவில் சமீபத்தில் சிம்போனி ஒன்றை இயற்றினார் இளையராஜா.
வேலியண்ட் என்ற அந்த சிம்போனியின் அரங்கேற்றம் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. பெரும் வரவேற்பை பெற்ற அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சென்னை வந்த இளையராஜாவுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில் லிடியன் நாதஸ்வரத்தை சிம்போனி எழுத சொல்லி இளையராஜா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. அதுகுறித்து பேசிய இளையராஜா “லிடியன் நாதஸ்வரம் சிம்போனி ஒன்றை உருவாக்கியிருப்பதாக ஒரு ட்யூனை என்னிடம் போட்டிக் காட்டினார். இது சிம்போனி இல்லை, சினிமா பாடல் மாதிரி இருக்கிறது. சிம்போனி என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு கம்போஸ் பண்ணு என்று கூறினேன். லிடியன் என்னுடைய ஒப்புதல் அங்கீகாரத்திற்காக வந்தார். என்னை யாரும் முன்மாதிரியாக எடுத்து நடக்க வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K