அரங்கேறியது இசைஞானியின் முதல் சிம்ஃபொனி!
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். Valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினே நேரில் சென்று வாழ்த்தினார்.
இந்நிலையில் நள்ளிரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு இளையராஜாவின் முதல் சிம்பொனி அரங்கேறியுள்ளது. இந்த சிம்ஃபொனியைக் காண கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டவர்கள் அந்த அரங்கில் கூடி இருந்தனர் என சொல்லப்படுகிறது.