1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (16:03 IST)

சுசி கணேசனுக்கு எதிராக பதிவு; சின்மயிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

இயக்குனர் சுசி கணேசன் மீது அவதூறு கருத்துகளை பதிவிட சின்மயி, லீனா மணிமேகலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் மீ டூ ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை பகிர்ந்து வருவது பெரும் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுசி கணேசன் மீது பெண் கவிஞர் லீனா மணிமேகலை மீ டூ புகார் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து லீனா மணிமேகலைக்கு எதிராக சுசி கணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சுசி கணேசன், இளையராஜா இணையும் அடுத்த படம் தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவிப்புகள் வெளியான நிலையில், சுசி கணேசன் குறித்து சின்மயி மற்றும் லீனா மணிமேகலை அவதூறாக பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களது குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என சுசி கணேசன் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிவிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சின்மயி மற்றும் லீனா மணிமேகலை  ஆகியோர் சுசி கணேசன் குறித்து பதிவிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.