தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனராக உருவாகியுள்ளார் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான வாழை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. படத்தில் முன்னணி நடிகர்கள் இல்லாத போதும் அந்த படம் திரையரங்குகள் மூலமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது துருவ் விக்ரம் மற்றும் அனுபமா நடிப்பில் பைசன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரின் ஐம்பத்து அறாவது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் பற்றி பேசியுள்ள மாரி செல்வராஜ் “கர்ணன் படத்தின் போதே நானும் தனுஷ் சாரும் மீண்டும் இணைய வேண்டும் எனப் பேசினோம். ஆனால் அது தள்ளிக்கொண்டே சென்றது. அந்த படத்தைப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கவுள்ளோம். அது ஒரு எளிமையான கதைதான். ஆனால் என்னுடைய திரை வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.