1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (08:51 IST)

அயலான் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை.. தொடங்கியது பிரச்சனை!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை மற்றும் கிராபிக்ஸ் பணிகளின் தாமதம் காரணமாக இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் படத் தயாரிப்பு நிறுவனம் கண்டிப்பாக பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்குமாறு டி எஸ் ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்களின் மனுவில் “அயலான் திரைப்படத்தை தயாரித்த 24 AM நிறுவனம் இந்த படத்துக்காக 10 கோடி ருபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த கடனை ஏற்றுக்கொண்ட கே ஜே ஆர் பிலிம்ஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துள்ளது. மீதம் பணத்தைக் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது” என வழக்கு தொடுத்திருந்தது.

இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம் அயலான் படத்தை நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக் கூடாது தடை விதித்துள்ளது. இதனால் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.