1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (14:14 IST)

ஒ சொல்வியா மாமா.. புஷ்பா பாடலுக்கு எதிராக வழக்கு!

புஷ்பா படத்தில் வெளியாகியுள்ள பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் சில அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கியுள்ள படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சில முன்னதாக வெளியாகி வைரலானது.

அதை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் ஐட்டம் பாடலான ஒ சொல்வியா மாமா என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியது. இந்த பாடலில் சமந்தா டான்ஸ் ஆடியுள்ள நிலையில் சமந்தாவின் புகைப்படங்களை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே இழிவாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என கோரி சிலர் இதுகுறித்து ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.