கேம்சேஞ்சர் பற்றிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்ட அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த்!
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த கேம்சேஞ்சர் திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த எதிரமறையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீத வசூலைக் கூட படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கேம்சேஞ்சர் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் “தில் ராஜு ஒரே வாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டார்” எனப் பேசியிருந்தார். அதாவது அவர் தயாரித்த கேம்சேஞ்சர் படம் பெரும் நஷ்டத்தையும், சங்கராந்திக்கு வஸ்துனாம் என்ற படம் பெரும் லாபத்தையும் கொடுத்ததாக கூறியிருந்தார்.
இது ராம்சரண் ரசிகர்களைக் கோபப்படுத்த இப்போது தன்னுடைய பேச்சுக்கு அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் “ராம்சரண் என் மகன் போன்றவர். எங்களுக்குள் ஒரு அழகான உறவு உள்ளது. நான் சொல்லவந்ததை தவறான வார்த்தைகளில் சொல்லிவிட்டேன். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.