1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (08:39 IST)

என்னைத் தலைவனாக ஏற்க வேண்டாம்: செல்பி பிரச்சனை குறித்து சிவகுமார் விளக்கம்

இன்று சமூக வலைத்தளங்களில் பலமணி நேரம் டிரெண்டில் இருந்த ஒருவிஷயம் செல்பி எடுக்க இளைஞரின் மொபைல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் பற்றியதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. பழம்பெரும் நடிகர், யோகா செய்பவர், சொற்பொழிவாளர், பொறுமையின் சிகரமாக இருப்பவர் ஒரு சாதாரண செல்பிக்கு கோபப்படுவது நியாயமா? என்ற ரீதியில் நெட்டிசன்கள் அவரை துவைத்து தொங்கவிட்டனர். இந்த நிலையில் சிவகுமார் இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது  உங்களுக்குத் தெரியுமா? நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறினார்.