வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (20:40 IST)

நெய்வேலி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு: சீமான் கோரிக்கை

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இந்த நிலையில் நெய்வேலி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையத்தில்‌ பாய்லர்‌ வெடித்து 6 தொழிலாளர்கள்‌ உயிரிழந்த கொடுஞ்செய்தியறிந்து சொல்லொணாத்‌ துயரமடைந்தேன்‌. அத்தொழிலாளர்களை இழந்து வாடும்‌ அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத்‌ தெரிவித்து அவர்களது துயரத்தில்‌ பங்கெடுக்கிறேன்‌.
 
கடந்த மாதம்‌ அங்கு நடைபெற்ற இதேபோன்ற ஒரு விபத்தில்‌ 8 பேர்‌ படுகாயமடைந்து, அதில்‌ 4 பேர்‌ உயிரிழந்த நீலையில்‌ நடந்தேறியிருக்கிற சம்பவம்‌ அங்கு பணிபுரியும்‌ தொழிலாளர்களிடம்‌ பெரும்‌ உயிரச்சத்தையும்‌, பாதுகாப்பின்மை உணர்வையும்‌ உருவாக்கியிருக்கிறது. அவர்களின்‌ அச்சத்தைப்‌ போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின்‌ முழுமுதற்கடமையாகும்‌. 
 
ஆகவே, அத்தொழிலாளர்களின்‌ உயிர்ப்‌பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்‌ எனவும்‌, அவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தலா
1 கோடி ரூபாய்‌ இழப்பீடு வழங்க வேண்டும்‌ எனவும்‌ நாம்‌ தமிழர்‌ கட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன்‌.
 
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.