1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (18:04 IST)

புலியுடன் கத்துக்குட்டி வெளியாவது தற்செயலானது - கத்துக்குட்டி இயக்குனர் இரா.சரவணன் பேட்டி

எலியோ புலியோ மோதிப் பார்த்துவிடுவது என்று அக்டோபர் 1 -ஆம் தேதி வெளியாகிறது, கத்துக்குட்டி. அன்றுதான் விஜய்யின் புலி வெளியாகிறது.
 

 

விஜய் படத்துடன் மோதுகிறது என்றால் கத்துக்குட்டி ஒரு புலிக்குட்டியாகத்தான் இருக்க வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குனர் சரவணனின் பேச்சில் சாதுர்யம் சுடர்விட்டது.
 
உங்க கத்துக்குட்டி பற்றி சொல்லுங்க. என்ன மாதிரியான படம்?
 
கத்துக்குட்டி தஞ்சை மண்ணின் வாழ்வியலுடனும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடனும் உருவாகி இருக்கிறது. நரேன் இந்த படத்தில் முதல் முறையாக நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் சூரி இன்னொரு கதாநாயகனாகவே வருகிறார். இருவரும் சேர்ந்து நகைச்சுவையால் ‘தூள்’ கிளப்புகிறார்கள். இது முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி இருக்கிறது.
 
நகைச்சுவை தவிர வேறு எதை கத்துக்குட்டியிடம் எதிர்பார்க்கலாம்?
 
நகைச்சுவை படம் என்றாலும், இன்றைய தலைமுறையினருக்கு தேவையான கருத்துக்களை சொல்லி இருக்கிறோம். நமக்கு படி அளக்கும் விவசாயிகளின் உழைப்பால்தான் ஒவ்வொரு கவளம் சோறும் நமக்கு கிடைக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கையுடன் சேர்ந்து இந்த கதை பயணிக்கிறது.
 
சூரியின் கால்ஷீட் கிடைப்பது இப்போதெல்லாம் கடினமாயிற்றே...?
 
நாங்கள் சூரியிடம் 12 நாட்கள்தான் கால்ஷீட் கேட்டோம். ஆனால், படத்தின் கதை மிகவும் பிடித்துப் போனதால் 32 நாட்களை அவர் எங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.
 
புலிக்கு போட்டியாக களம் இறங்குகிறீர்களே?
 
விஜய் சாரின் புலி படம் வெளியாகும் நாளில் இந்த படமும் வெளியாவது தற்செயலாக அமைந்தது. வேறு காரணம் எதுவும் இல்லை.
 
ஆனாலும், விஜய் படம் வெளியாகும் போது கத்துக்குட்டியும் வெளியாவது வீணான வதந்திக்கு இடம் கொடுக்குமே...?
 
இரண்டு மாதங்களுக்கு முன்னால் யதார்த்தமாக நடிகர் விஜய்யை சந்தித்தோம். அப்போது அவருடைய புலி படம் எப்போது ரிலீஸ் என்று கேட்டோம். எங்களின் கத்துக்குட்டி படத்தைப் பற்றியும் அவரிடம் பேசினோம். "நல்லபடம் எப்போ வந்தாலும் ஜெயிக்கும். நீங்க கவலையே படாதீங்க" எனச் சொல்லி எங்களுக்கு தைரியமூட்டினார். புலி படம் வெளியாகும் நாளிலேயே அவரது அன்புடன் எங்கள் படம் வெளிவருவதில் மகிழ்ச்சி.