1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (10:11 IST)

பயிற்சியாளர் தேர்வு – கோஹ்லி கருத்தால் சர்ச்சை !

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே நியமிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என இந்திய கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவி காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிந்துவிட்டது. இருப்பினும் அடுத்த மாதம் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அவர்களது பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதவி நீட்டிக்கப்பட்டாலும் புதிய பயிற்சியாளர் தேர்விற்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதற்கான தகுதிகளையும் விவரித்துள்ளது.

அந்த பதவிகளுக்காக ரவி சாஸ்திரி, சஞ்சய் பங்கர், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி, பரத் அருண்,ஸ்ரீதர், ராபின் சிங், நியூஸிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹசன், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தலைமையிலான குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மீண்டும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே நியமிக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதைக் கருத்தில் கொள்ளமாட்டோம் என தேர்வுக்குழு உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்ப இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பயிற்சியாளர் தேர்வு குறித்து தனது கருத்தைச் சொல்ல கேப்டனுக்கு உரிமை உள்ளது என அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.