1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (20:50 IST)

இதெல்லாம் நடக்கும்னு ஒருநாளும் நினைத்ததில்லை… கோலி நெகிழ்ச்சி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நாளை தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சமீபமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இதற்கு அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. அவருக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் நாளை மொகாலியில் இலங்கைக்கு எதிராக நடக்க உள்ள போட்டி விராட் கோலியின் 100 ஆவது போட்டியாகும். எந்த வொரு கிரிக்கெட் வீரருக்கும் 100 ஆவது போட்டி என்பது மிகப்பெரிய சாதனை மைல்கல்லாகும். இதையடுத்து நாளை இந்த சாதனையை நிகழ்த்த உள்ள கோலிக்கு பிசிசிஐ மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் வீடியோ மூலமாக தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத கோலி நாளை அந்த குறையையும் போக்கிவைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் 100 ஆவது போட்டி குறித்து பேசியுள்ள கோலி 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார். மேலும் ‘இது ஒரு நீண்ட பயணம். இதில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் கருணையால் அனைத்தும் நடக்கிறது’ எனக் கூறியுள்ளார்.