1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (18:08 IST)

'இந்தியாவின் முடிவை மதிப்போம்' - பாகிஸ்தானுடனான போட்டி குறித்து கோலி

எதிர்வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமும் பாகிஸ்தான் உடனான போட்டிகளை இந்திய அணி புறக்கணிப்பது குறித்து என்ன முடிவை எடுத்தாலும், அந்த முடிவை மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்பு படையினர் மீது பிப்ரவரி 14 அன்று நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டபின், உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
 
இங்கிலாந்தில் நடக்கும் இந்தத் தொடரில் ஜூன் 16 அன்று இரு நாடுகளும் மோதவுள்ளன. "நடந்த நிகழ்வுகள் குறித்து இந்திய அணியும் மற்ற அனைவரும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளனர்," என்று கோலி கூறியுள்ளார்.
 
தீவிரவாதத்துடன் தொடர்புள்ள நாடுகள் உடனான தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி இருந்தது. கடைசியாக நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர்களில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானை வென்றுள்ளது.
 
பாகிஸ்தான் உடனான போட்டியைப் புறக்கணித்தால் மிகவும் முக்கியமான இரண்டு புள்ளிகளை இந்தியா இழக்கும் என்று கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்த முடிவு எடுத்தாலும் அதைத் தான் ஆதரிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.