1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:41 IST)

நெறய பேரு அசிங்கமா மெஸேஜ் பண்றாங்க…. ஆதங்கத்தை கொட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்!

சில தினங்களுக்கு முன்னர் நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்றாக அமைந்தது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்று முன் தினம் நடந்த  ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து 161 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.

162 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா 9 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி வந்தது. சில விக்கெட்டுகளை இழந்தாலும் வெங்கடேஷ் ஐயர் நின்று நிதானமாக விளையாடி ஒரு அரைசதத்தை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய பேட் கம்மிம்ஸ் மைதானத்தில் ஒரு ருத்ர தாண்டவத்தை ஆடினார். சரமாரியாக 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை அடித்து நொறுக்கி 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார்.

அதிலும் குறிப்பாக 16 ஆவது ஓவரை வீசிய டேனியல் சாம்ஸின் ஓவரில் 4 சிக்ஸர்கள் உள்பட 35 ரன்களை சேர்த்தார். இந்த ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்நிலையில் மோசமான அந்த ஓவரை வீசிய சாம்ஸ் குறித்த ட்ரோல்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுபற்றி தற்போது பேசியுள்ள சாம்ஸ் ‘ வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் இரு பகுதிகள். என்னுடைய ஆட்டம் அந்த நாளில் சிறப்பாக இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்காக என் சொந்த வாழ்க்கையை விமர்சிப்பது சரியல்ல. நிறைய இந்தியர்கள் அசிங்கமான திட்டுகளுடன் கூடிய மெஸேஜ்களை என்னுடைய சமூகவலைதளப் பக்கத்துக்கு அனுப்புகிறார்கள்’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.