1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (15:05 IST)

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று கூறுவது ஏன்...?

இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும். எனவே இம்மாதம் கெடுதலான மாதம் கிடையாது.

மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம்தான். பீடை மாதம் என்பதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பீடுடைய மாதம் என்பதே நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது.
 
பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய, சிறப்புக்கள் நிரம்பியது என்று அர்த்தம். 'மாதங்களில் நான் மார்கழி" என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே கூறியிருக்கிறார் என்றால் அதன் சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளின் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே, இந்த பெருமை பொருந்திய மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
 
இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வட மொழியில் சொல்வர்.

மார்கம் என்றால் - வழி, சீர்ஷம் என்றால் - உயர்ந்த, வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உகந்த மாதமாக உள்ளது.