1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போடுவதன் காரணம் என்ன...?

விஷ்ணு தான் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற  முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச்  சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை  அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை  செய்தார்.
 
மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும்  சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த  சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.
 
அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக் கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக  இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.
 
அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப்பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு.