வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அம்மன் வழிபாட்டில் லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் உண்டாகும் பலன்கள்..!!

சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகத்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்கவேண்டும்.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. 
 
அகத்தியரும், அவரது மனைவி லோபா முத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப்  போற்றப்படுபவர்கள்.
 
அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. இவ்வளவு சிறப்புகள் பெற்று தன்னுள் அனைத்து தெய்வ சக்திகளையும்  அடக்கியுள்ள லலிதா சகஸ்ரநாமத்தை நாமும் கூறுவதால் வாழ்வில் சகல சந்தோஷங்களையும் அனுபவிக்கலாம். இந்த ஆடி மாதத்தின்  அம்மன் வழிபாட்டினை லலிதா சகஸ்ரநாமத்துடன் ஆரம்பியுங்கள்.
லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவையும் படிக்கப் படிக்க ஜாதி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. உயர் பண்புகளை தன்னுள்  வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.
 
இந்த லலிதா சகஸ்ர நாமத்தினை படிப்பதால் உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர். அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும்.
 
பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும். அன்றாட நித்திய பூஜை முறைகளையும் அவரவர் குடும்ப வழிபாடு பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.
 
கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும். எதிரிகள் நீங்குவர். வெற்றி கிட்டும். பொன், புகழ், பொருள் சேரும், லலிதா சகஸ்ர நாமம்  தினசரி சொல்வது ஒரு தவமாகும்.