செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் பூஜை அறையை எவ்வாறு பராமரிப்பது...!!

பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்தபின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர்கொண்டு ஒத்தி விளக்கை  அணைக்கலாம்.

பூஜை செய்த மணமிக்க மலர்களை வீணாக்காமல், அடுத்தநாள் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்து மணமுள்ள சீயக்காயாகப் பயன்படுத்தலாம்.
 
மழை நாட்களில், தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கலாம்.
 
வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கிழமை பூஜைக்கு  உதவியாக இருக்கும்.
 
ஆணி இல்லாத படத்திற்கு பூ வைக்க, பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு சுவாமி படத்தின் பின் தலைகீழாக ஒட்டவும். இந்த மூடியினுள் காம்பைச் செருகி பூ வைக்கவும்.
 
பாத்திரம் கழுவ உதவும் க்ளீனிங் திரவம் தீர்ந்த பின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்குகளுக்கு சிந்தாமல் எண்ணெய் ஊற்றலாம்.
 
அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம் அடைக்காமல் இருக்கும்.
 
பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். வீட்டில் கட்டாயம் குலதெய்வ படத்தை வைத்து  பூஜிக்கவேண்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்ற குலதெய்வ அருள் கிட்டும்.
 
வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பையும், இன்னொரு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்லவேண்டும். திரும்ப வரும்வரை அவையே தெய்வங்களுக்கு பிரசாதங்கள்.