ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அட்சய திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்...!!

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம்.  


அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் மிகவும்பெருகி வளம் சேர்க்கும்.  குறைவில்லாத செல்வத்தை அள்ளித்  தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.
 
அட்சய திருதியை நாளன்று விடியும் முன் எழுந்து சுத்தமாக நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி கோலம் போட்டு அதன் மீது ஒரு பலகையை  வைக்கவும். பின் பலகையின் மீது கோலம் போட்டு ஒரு சொம்பில் சந்தன கும்குமம் இட்டு அதில் நீரை நிரப்பி அதன் மீது  பெரிய தேங்காயை வைத்து  மாவிலைகளை அதனைச் சுற்றி அதுக்கி கலசம் போல் தயார் செய்ய வேண்டும்.
 
பின் அந்த கலசத்தின் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் அருகில் புதிதாக வாங்கிய பொன், பொருள்களை வைத்து, பூ  போட்டு பூஜை செய்ய  வேண்டும். பிறகு அதற்கு கற்பூர தீபாராதனைக் காட்டி வணங்கினால் வளமான செல்வம் பெருகும்.
 
அந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். உணவு, வஸ்திரம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். பசுவுக்கு கீரை வகைகளை வழங்கலாம்.  இந்நாளில் அன்னதானம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.
 
இந்த அட்சய திருதியை தினத்தன்று வெண்மை நிறப் பொருட்கள் விசேஷமானது ஆகும். வெண்ணிற மல்லி பூ, வெண்பட்டு ஆடை, வெண்ணிற பால் பாயசம் இவைகளைப் பயன்படுத்துதல் சிறப்பாகும். அட்சய திருதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டும் என்று  நினைக்க வேண்டாம். வசதி உள்ளவர்கள் வாங்கலாம்.  வசதி இல்லாதவர்கள் உப்பு, மஞ்சள், நெல், அரிசி ஆகியவற்றை வாங்கி லட்சுமி  படத்திற்கு முன் வைத்து வழிபடலாம்.