வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

ஆன்மிகவாதியின் நோக்கம் நரகத்தை நீக்கி சொர்க்கத்தை பெறுவது...!

யோகிகளின் நோக்கம் உடம்பை அறிந்து, உயிரை அறிந்து, உடம்புக்கும் உயிருக்கும் உள்ள கேடுகளை அறிந்து நீக்குவதுதான்.  அதில் முதலாவது கபம். உடம்பும் நமக்கு விரோதிதான். ஆனால் உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தினம் சோறு சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், குளிக்கிறோம். இப்படியெல்லாம் செய்து உடம்பை காப்பாற்றிக் கொள்கிறோம். ஆனால்  காப்பாற்ற வேண்டியது இந்த புற உடம்பு அல்ல.
இந்த புற உடம்பைக் காப்பாற்றிக் கொள்பவன் ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. காப்பாற்றப்பட வேண்டியது உள்ளுடம்பாகிய உயிருடம்பு. அது சூட்சும தேகம். நாம் காண்கின்ற உடம்பு தூல தேகம், காண முடியாத உடம்பு சூட்சும தேகம். சூட்சும  தேகத்தை அறிவால்தான் உணர முடியும். சூட்சும உடம்பை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் வாசி வசப்பட வேண்டும். வாசியாகிய மூச்சுக்காற்று லயப்பட வேண்டும். மூச்சுக்காற்று லயப்பட்டால்தான், கபத்தையும் அறுக்கும், அவத்தையும் (அவம்)  அறுக்கும். இதை புரிந்து கொண்டவன்தான் ஆன்மீகவாதியாக இருக்க முடியும். மகான் திருவள்ளுவப்பெருமான் மிகப்பெரிய  யோகி.
     
தவத்திற்கென்று ஒரு அறிவு இருக்கிறது. மற்றவர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. அது என்ன அறிவு? அந்த அறிவு யாரால் கிடைக்கும்? அந்த அறிவு கொண்டு தவம் செய்வது? தவத்தின் நோக்கமே அவத்தை அறுப்பதுதான். அவம் என்கிற  வினையை நீக்குவது.
 
உடம்பு தோன்றும்போது அவமும் சேர்ந்துதான் தோன்றுகிறது. அவம் என்றால் வீண். வீணான உடம்பும் சேர்ந்துதான் தோன்றுகிறது. இல்லையென்றால் உயிர் வளராது. ஆக தவமும் தவமுடையார்க்கு ஆகும். அவன்தான் அறிவுள்ளவன். இந்த ஏட்டு அறிவு பயன்படாது. ஏட்டு அறிவின் துணை கொண்டு அவத்தினை அறுக்க முடியாது. 
 
இந்த உடம்பில் நரகமும் சொர்க்கமும் சேர்ந்தே இருக்கிறது என்பதை அறிகின்றவன்தான் அறிவாளி. அவன்தான் ஆன்மீகவாதி.  நரகத்தையும் சொர்க்கத்தையும் அறிந்து கொண்டு, நரகத்தை நீக்கி சொர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை உள்ளவன்  எவனோ, அவன்தான் ஆன்மீகவாதி. இதை அறிந்து பேசுகின்றவர்தான் ஆன்மீகவாதி.