செவ்வாய், 19 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள்...!

தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.
ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான்.
 
பாவமும், பாதரசமும் எளிதில் செரிமானமாகாது. மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல்  போவதில்லை.
 
பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை  அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.
 
அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும். உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.
 
சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விசத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும்.
 
மாயை என்பது தாய், தகப்பன், சகோதர - சகோதரிகள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரிடத்து ஒருவனுக்கு உண்டாகும் வாஞ்சையாகும். எல்லா  ஜீவப்பிராணிகளிடத்தும் சமமாகப் பரவும் அன்புக்குத் தயை என்று பெயர்.