வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (09:38 IST)

விரக்தியில் தாய் மற்றும் தங்கையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள கெங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (46). இவரது மனைவி சுமதி (40). இவர்களுக்கு ரஞ்சித் (25) என்ற மகனும் வித்யப்ரியா (24) என்ற மகளும் இருந்தனர். ராஜாராமிற்கு சிறுநீரகம் செயலிழந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 60 லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவ நிர்வாகம் ராஜாராம் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வளவு தொகையை ராஜாராம் குடும்பத்தாரால் புரட்ட முடியவில்லை. இதனால் ராஜாராம் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டனர்.
 
இந்நிலையில், நேற்று காலை முதல் ராஜாராம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சுமதி மற்றும் வித்யப்ரியா இருவரின் கை நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகிலேயே ரஞ்சித்தும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அங்கு கிடைத்த ரஞ்சித் எழுதப்பட்டதாக சொல்லப்படும் கடிதத்தில், “எங்கள் தந்தையின் மருத்துவ சிகிச்சைக்குரிய பணத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் நாங்கள்  3 பேரும் தற்கொலை  செய்துகொள்கிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.  இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.