வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (15:09 IST)

எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இன்று அரசமரியாதையோடு தகனம்

கடந்த 21 ஆம் தேதி மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான பாண்டிச்சேரியில் இன்று அரச மரியாதையோடு தகனம் செய்யப்பட இருக்கிறது.

1945 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். தஞ்சாவூரில் கல்லூரிப்பப்பை மேற்கொண்ட பிரபஞ்சன் அங்குள்ள கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் ஆகிய தமிழின் முக்கிய எழுத்தாளர்களோடு பழக ஆரம்பித்தார். அவர்களின் ஊக்குவிப்பாலும் இளமையிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தாலும் எழுத்துலகில் காலடி வைத்தார். ஆரம்ப காலத்தில் கவிதைகளின் மீது கொண்ட ஈர்ப்பால் கவிதைகள் எழுதினார். ஆனால் காலப்போக்கில் கவிதைகளை நிறுத்தி விட்டு உரைநடைகளை எழுத ஆரம்பித்தார்.

தமிழின் முக்கியப் பத்திரிக்கைகளான குமுதம், குங்குமம், நக்கீரன் ஆகியவற்றிலும் சிறுபத்திரிக்கைகள் பலவற்றிலும் எழுதியுள்ளார். இவர் எழுதிய வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காகித மனிதர்கள் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் புகழ்பெற்றவை. இவர் எழுதிய வானம் வசப்படும் நாவலுக்காக இவருக்கு 1995 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருது வழங்கபப்ட்டது. தனது கதைகளிலும் நாவல்களிலும் பெரும்பாலும் பெண்களைப் பற்றிய எழுதிய பிரபஞ்சன், தனது கதைகள் யாவும் ‘வீட்டுக்கு வெளியே ஆரம்பிக்கின்றன. வீட்டுக்கு வரும் முன் முடிகின்றன’ என்று கூறுகிறார்.

கடந்த ஓராண்டாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த பிரபஞ்சன் இரு தினங்களுக்கு முன்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல்  நேற்று முழுவதும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனையடுத்து இன்று மாலை அவரது உடல் பாண்டிச்சேரியில் அரச மரியாதியோடு தகனம் செய்யப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் தெர்வித்துள்ளார்.