செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (12:08 IST)

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா..? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!!

Naiyanar Nagendran
4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் இருந்த மூன்று பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது. மேலும்  பாஜக நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.
 
ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்ததாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
 
எனவே, நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் ராகவன் சார்பில் வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு  இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.