1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (08:44 IST)

48 மணி நேரம்தான் கெடு; உக்ரைனை விட்டு வாங்க! – அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தல்!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் உள்ளதால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நவம்பர் முதலாக தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது.

இதனால் உக்ரைனில் போர் மூளும் அபாயம் உள்ள நிலையில் அங்குள்ள அமெரிக்கர்களை வெளியேற சொல்லி அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். வான்வெளி தாக்குதல் மூலம் படையெடுப்பு நடைபெறும் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். எனினும் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை 48 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது.