1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : சனி, 24 அக்டோபர் 2020 (23:31 IST)

கரூர் நகரத்திற்கு புதிய பேருந்து நிலையம் வருவது எப்போது ?

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 4 வழிகளிலும் ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகள் அமைக்க வேண்டுமென்றும், டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ 5 மற்றும் ரூ 10 கூடுதல் வைத்து விற்கும் பணம் எங்கே செல்கின்றது என்றும் சரமாரி தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். கரூர் கெளரிபுரம் கிழக்கு பதியில் அமைந்துள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, கரூர் நகர செயலாளர் லோகேஷ், மாநில துணை செயலாளர் முகம்மது அலி, மாவட்ட துணை தலைவர் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் பிரின்ஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார், கரூர் மாவட்டத்திற்கு, கரூர் நகரம் பல்வேறு புராதான சிறப்புகள் பெற்றும், புதிய பேருந்து நிலையம் என்பது ஒரு அறிக்கையாக மட்டுமே உள்ளதாகவும், இதுவரை ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறாத நிலையில் பேருந்து நிலையம் இன்றுவரை அமைய வில்லை என்றதோடு., புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைய நடவடிக்கை வேண்டுமென்று மாநில அரசினை கேட்டுக் கொண்டனர். கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதற்கு பாராட்டினை தெரிவித்து கொண்ட, அவர்,

அந்த சிறப்பு வாய்ந்த மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு செல்லும் போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆகவே நன்கு சாலைகளை பராமரிக்க வேண்டுமென்றும், நோயாளிகள் அந்த மருத்துவமனைக்கு சென்று வர ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் செல்ல, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நான்கு வழிகளிலும் சாலைகள் அமைக்க வேண்டுமென்றார்.

இதனை தொடர்ந்து மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் பாலமுருகன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சட்டவிரோதமாக ரூ 1 முதல் ரூ 5 மற்றும் ரூ 10 என்று கூடுதலாக டாஸ்மாக் சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் அந்த பணம் எங்கே செல்கின்றது யாருக்கு செல்கின்றது என்பதனை அரசே தெரிவிக்க வேண்டுமென்றார்.