1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (13:17 IST)

பிரதமர் எடப்பாடியாரே வருக... போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்...முன்னாள் எம்.பி. விமர்சனம்

edapadi palanisamy
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக முதலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக சமீபத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகியது.

இந்த நிலையில், அதிமுகவினர் பாஜகவை விமர்சித்து வருகின்றனர். இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116 வது பிறந்த னாளை முன்னிட்டு வருகை தரும்  அதிமுக பொ., செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பாரத பிரதமர் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தன் வலைதள பக்கத்தில்,’’ எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு பதில் இல்லாததன் வெளிப்பாடா ? அல்லது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படுத்தும் யுக்தியா?

அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் அம்மாவை ஒரு தேசிய தலைவராகவும், பிரதம அமைச்சருக்கு தகுதியான தலைவராகவும் பார்த்தார்கள். அதற்குரிய திறமை, செல்வாக்கு  ஆளுமைத்திறன் அவரிடம் இருந்தது. ஆனால் எடப்பாடி பற்றி பேசும் பொழுது எந்த ஒரு இந்திய பிரஜையும் தலைவர் ஆகலாம் என்கிற தகுதி மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது மட்டுமே தகுதி அல்ல. இதுபோன்ற பிரச்சாரங்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் பாரம்பரிய வக்குவங்கியை குறைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இபிஎஸ் முதல்வர் ஆக  இருந்தபொழுதும் கூட கட்சியும் ஆட்சியையும் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எந்த தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அப்படி இருக்கையில்
எடப்பாடி பழனிசாமி-ன் எதிரிகள் அவரை வீழ்த்துவதற்கு உண்டான ஆயுதமாக தான் இதனை பார்க்க முடிகிறது .

மோடியா? லேடியா? என்று சந்தித்த 2014-தேர்தலுக்கு பிறகு வழக்குகளின் கடுமை தன்மையால் அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

தேசிய அளவில் இபிஎஸ் க்கு என்ன பார்வை இருக்கின்றது?
சமீபத்தில் கூட ஆரியம் திராவிடம்  என்னவென்று எனக்கு தெரியாது .அது எல்லாம் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தான் தெரியும் என்று சொன்ன அறிவாளி தான் இபிஎஸ்.

ஆனால் ஒன்று மட்டும் நடக்கும்.அவர் பிரதமர் ஆனால் ஒவ்வொரு எம்பி-க்கும் மாதம் ஒரு கோடி கொடுத்து அவர்களை நன்றாக கவனித்து கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பார். இந்த ஒரு திறமையை தவிர அவரிடம் கருத்தியல் ரீதியாகவோ , ஆளுமை தன்மை ரீதியாகவோ, ஆட்சி அதிகார  ரீதியாகவோ எந்தவொரு திறமையும் இருப்பதாக தெரியவில்லை.

பிரதமர் யார் என்று முடிவு செய்கின்ற இடத்தில் அதிமுக இருக்கும் என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்குமே ஒழிய, நான் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஓட்டு கேட்கும் பொழுது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வாங்கியே குறைந்து போய்விடும். இப்படித்தான் எடப்பாடியின் அடிவருடிகள் எல்லா தலைவர்களையும் முதலில் புகழ்வார்கள். அப்படி புகழ்ந்து பேசினால் புகழ்ச்சி அடைபவர்களுக்கு ஆபத்து நெருங்கிக்கொண்டு வருகிறது என்று அர்த்தம்.

இதனை உணர்ந்து கொண்டு அதிமுகவின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட  வேண்டும் ‘’ என்று தெரிவித்துள்ளார்.