வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:45 IST)

அரசு ஒத்துழைத்தால் அனைத்து சிலைகளும் மீட்கப்படும்: பொன் மாணிக்கவேல் பேட்டி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோவில் ஒன்றில் இருந்து கடந்த 1982ஆம் ஆண்டு கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சமீபத்தில் டெல்லி கொண்டு வரப்பட்டது. இந்த பஞ்சலோக நடராஜ சிலை சற்றுமுன் சென்னை சென் ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த சிலையை வரவேற்ற  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி அனைத்து தரப்பினருக்கும் நன்றி. பஞ்சலோக நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது, எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. குறிப்பாக சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்னை உள்ளது. மேலும் இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது.


கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு தனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன. எனக்கு அகம்பாவமோ, ஆணவமோ இல்லை.  அரசு ஒத்துழைத்தால் மீதமுள்ள சிலைகளையும் மளமளமென மீட்டு தமிழகம் கொண்டு வந்துவிடுவோம். இவ்வாறு சிலைக்கடத்தல் தடுப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தனது பேட்டியில் கூறியுள்ளார்.