1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Alagesan
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (09:04 IST)

தலைதூக்கும் தண்ணீர் தட்டுப்பாடு - தவிக்கும் பொதுமக்கள்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு எதிர்பார்த்தபடி வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதிக்கு பிறகு தொடங்கியது. ஆனாலும், தமிழகத்தில், ஆங்காங்கே மட்டும் விட்டு விட்டு மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி 20 நாட்களுக்கு மேலான நிலையில் எதிர்பார்த்தபடி தீவிரமடையவில்லை. இதனால், தமிழகத்தில் பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இதற்கு, ஏற்கனவே தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள முக்கிய அணைகள், ஏரிகளின் நீர் மட்டம் குறைந்து காணப்படுவதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பவானிசாகர் அணை, மேட்டூர், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, அமராவதி உட்பட 89 அணைகளும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம் உட்பட 14 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. வழக்கமாக, கோடை காலத்தில்தான் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் தலை தூக்கியுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரையில் குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளிலும் 1 டிஎம்சி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஒரு நாளைக்கு 80 கோடி லிட்டர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில், இந்த தண்ணீரை கொண்டு 1 மாதத்திற்கு கூட சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. 
 
தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் ஆந்திர அரசு தருவதாக இருந்த 2 டிஎம்சி நீரையும் முழுமையாக தரவில்லை. தற்போது கூட கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 23 அடி அளவு மட்டுமே உள்ளதால், அந்த நீரை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் என்னசெய்வதென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், விரைவில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.