1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (10:36 IST)

இனி மேடைகளில் கேட்கும் கேப்டனின் கர்ஜனை! – மீண்டும் வருகிறார் விஜயகாந்த்!

நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அவரது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு அவர் சிகிச்சைக்காக சென்று வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நரம்பியல் ரீதியான பாதிப்பு இருப்பதால் அவருக்கு அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீரடைய தொடங்கியிருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே சிகிச்சை மீதம் இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை சீராக தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக அதிகம் பேசாமல் இருந்த விஜயகாந்த் தற்போது முன்னர் போலவே குரல்வளத்தை திரும்ப பெற்றுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் சில நாட்களில் விஜயகாந்த் முன்னர் போலவே மேடைகளில் பேச தொடங்குவார் என்பதால் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.