வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 1 ஜூன் 2016 (13:37 IST)

பலகோடி பணம் மற்றும் காதலியுடன் தலைமறைவானாரா மதன்?

வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தனது காதலியுடன் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


 
 
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
 
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதன் தான் கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாரிவேந்தர் மீதான தனது மரியாதையையும், சிலர் பரப்பிய அவதூறு காரணமாக அவர் மதனை புறக்கணிப்பதையும், பல கோடிகள் பாரிவேந்தருக்கு உதவி செய்ததையும் மதன் குறிப்பிட்டுள்ளார். இனியொரு ஜென்மமே வேண்டாம் என்று காசியில் சமாதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில் மதனை தேடும் முயற்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர் சிவா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் வாரனாசி சென்றுள்ளனர். இவர்கள் தற்போது மதன் தங்கியிருந்த ஹோட்டல் அறையை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு மதன் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய பெட்டி உள்ளிட்ட சில பொருட்கள் ஹோட்டல் அறையில் இருந்தன. 
 
இந்நிலையில் அவர் குறித்த சில செய்திகள் பேசப்பட்டு வருகின்றன. அதில் அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதாக கூறி பல மாணவர்களிடம் பெரும் தொகையை வசூலித்து வந்ததாகவும், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவருடன் நெருங்கி பழகிவந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த பணம் மற்றும் காதலியுடன் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.