திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:35 IST)

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துருக்கீங்க சூர்யா! – உதயநிதி பாராட்டு

நீட் தேர்வு விவகாரம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்துகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்த நிலையில், முன்னதாக நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது கருத்துகளை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளதாக அவர்மீது புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் அறிக்கை குறித்து பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதில் அவர் ” கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்!” என கூறியுள்ளார்.

இதில் பிற உச்ச நடிகர்கள் என ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகரையும் உதயநிதி மறைமுகமாக குறிப்பிடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.