1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (11:04 IST)

எடப்பாடி அவர்களே.. ஆட்டுத்தாடிக்கு பின்னால் ஒளிய முடியாது! – உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!

Edappadi Udhayanithi
மணிப்பூர் சம்பவம் மற்றும் ஊழல் விவகாரங்களை திசை திருப்பவே சனாதன விவகாரத்தை பெரிதுப்படுத்துவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அவரது தலைக்கு விலை வைக்கும் அளவிற்கு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உதயநிதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சனாதன விவகாரம் குறித்து மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அதில் அவர் “9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாசிஸ்ட்டுகள் பொய்ச்செய்தியை கையில் எடுத்துள்ளார்கள். பாஜகவின் பொய் கூச்சல்களை புறந்தள்ளி,கழகப்பணி - மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி சமத்துவம் - சமூக நீதி காப்பதற்கான நம் பயணத்தை தொடருவோம். அவதூறுகளை நம்பி களமிறங்கியிருக்கும் ஆதிக்கவாதிகளை, வீட்டுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட அறிக்கையில் “சனாதனம் குறித்த எனது பேச்சை, இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் என திரித்து, அதையே மையமாக வைத்து அமித்ஷா போன்ற ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள் என் மீது நடவடிக்கை கோரினர் நியாயமாகப் பார்த்தால் மதிப்புமிக்க பொறுப்பில் இருந்து அவதூறு பரப்பும் இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்; ஆனால், இவர்களுக்கு பிழைப்பே இதுதான் என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேசியுள்ள அவர் “சனாதனம் என்றால் என்ன? என்பதை வீட்டில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் தேடும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆட்டுத் தாடிக்கு பின்னால் நீண்ட காலம் ஒளிய முடியாது; ஆடு ஒருநாள் இருக்காது என்பது உங்களுக்கு நினைவு இருக்கட்டும்” என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையை தொடர்ந்து எதிர் கருத்தாளர்களிடம் இருந்து பதில் அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K