தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று வெவ்வேறு பாலியல் குற்றச்சாட்டில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் போக்சோவில் கைதாகும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றும் பாலியல் குற்றச்சாட்டில் ஒரு ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பெருமாள் அப்பள்ளியில் படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, மாணவிகள் புகாரின் பேரில் அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் நெல்லிக்குப்பத்தில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஞானப்பழனி என்ற ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K