திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (13:18 IST)

கல்வி நிதி வழங்க மறுப்பு.. விகடனுக்கு தடை..? ஃபாசிசம் இல்லாம வேறென்ன? - தவெக விஜய் ஆவேசம்!

தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்தது, விகடன் ஊடகத்திற்கு தடை விதித்தது போன்றவற்றை கண்டித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர், தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என பகிரங்கமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

 

இந்நிலையில் சமீபத்திய மத்திய அரசின் போக்கு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய் “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

 

ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

 

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

 

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” என தெரிவித்துள்ளார்.

 

மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K