1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (11:31 IST)

உங்க இஷ்டத்துக்கு ஆளுக்கு ஒன்னு பேசுவீங்களா? – டிடிவி பாய்ச்சல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் மக்களை குழப்புவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 500 வீதம் இருந்த பாதிப்பு எண்ணிக்கைகள் தற்போது ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கொரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டவற்றிலும் தற்போது கொரோனா பாதிப்புகள் உருவாக தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஆட்சியாளர்கள் ஆளுக்கொரு அறிவிப்புகளை வழங்கி மக்களை குழப்புவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” சென்னையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே, சோதனை செய்துகொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே இத்தகைய முறையில் தனிமைப்படுத்தி வந்தனர். தற்போதைய அறிவிப்பின் படி சோதனையில் நோய் இல்லை ("NEGATIVE") என்று வந்தாலும் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் சொல்கிறாரா?” என   கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “கொரோனா தடுப்புப்பணிகளில் ஆட்சியாளர்கள் ஆளுக்கொன்றாக பேசியும்,செயல்பட்டும்,அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கொரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள்.'தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்'என்பது போல் மக்களின் உயிரோடு நாள் தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.