1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (17:37 IST)

எதிர்ப்பை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் பணியமர்த்துவதா? டிடிவி தினகரன் கண்டனம்..!

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு அனைத்து தொழிற்சங்கத்தினரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணிக்காக காத்திருக்கும் பல நூறு இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கத்தோடு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்திருப்பதன் காரணம் என்ன?
 
தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர் நியமனத்தைக் கைவிடும்படி அரசின் தொழிலாளர் நலத்துறையே அறிவுறுத்திய போதிலும் அதனை அரசு சார்ந்த துறையான மாநகர போக்குவரத்துக் கழகம் செயல்படுத்த மறுப்பது ஏன்? தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதன் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகம் அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறதா என சந்தேகம் எழுகிறது.
 
ஆகவே ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து நீண்டநாட்களாக காத்திருக்கும் தகுதியான நபர்களை ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தேர்வு செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன். 
 
Edited by Mahendran