வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (19:25 IST)

சாண் ஏறினால் முழம் சறுக்கும் டிடிவி தினகரன்: 40 நிர்வாகிகள் ராஜினாமா!

அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார்.  

ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.

இதை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் சிலர் திமுக, அதிமுக கட்சிகளில் போய் சேர்ந்து கொண்டனர். இருந்தாலும் நம்பிக்கையை கை விடாத தினகரன் உள்ளாட்சி தேர்தல்களில் டெல்டா மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பெற வேண்டும் என உற்சாகமாக களத்தில் இறங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்து கட்சியை மேம்படுத்த புதிய நிர்வாகிகளை நியமித்தார் டிடிவி தினகரன்.

அதில்தான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமமுக நிர்வாகியோடு அந்த பகுதி அமமுக உறுப்பினர்கள் பலருக்கு ஒவ்வாத தன்மை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது அதிகாரத்தின் கீழ் இயங்க விரும்பாத முக்கிய நிர்வாகிகள் உட்பட 40 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு முறை பிரச்சினைகள் வரும்போதும் அவற்றை தாங்கி கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல தினகரன் சாண் அளவு ஏறினால் முழம் அளவு சறுக்குகிறது. இந்த நிலை நீடித்தால் விரைவில் டிடிவி தினகரனின் கட்சி மக்களின் மனதில் இல்லாமலே போய்விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.