1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (16:07 IST)

முலாம் பூசிய போலி: திமுகவில் இணையும் செந்தில் பாலாஜியை தாக்கிய தினகரன்

அமமுக கட்சியை சேர்ந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகியது. தற்போது இந்த செய்திகளை உறுதிபடுத்தும் விதமாக தினகரன் வெளியிட்டுள்ள கடிதம் உள்ளது. 
 
18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு எதிராக வந்ததாலும், தினகரனுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தினகரனின் நம்பிக்கைக்குரிய செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளாராம். 
 
இந்நிலையில், தினகரன் தனது கடிதத்தில் பெயர் குறிப்பிடாமல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிமுக என்ற பெயரில் நாம் இயங்கிய போது அறிவிக்கப்பட்டிருந்த ஒரு ஒன்றிய கழக செயலாளர், நேற்று கட்சியைவிட்டு சென்றுவிட்டாராம், அதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தி காட்டுகிறது. 
அமமுகவில் இருந்து சில நபர்களோ, குழுவோ சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பது பூனை கண்மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போன்றது. ஆலவிருட்சத்தில் இலைகள் உதிர்வதால் விருட்சமே போய்விடுமா? 
 
நெல்மணிகளோடு, களைகளும் சேர்ந்து வளர்வது நிலத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்தான். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள்? அமமுகவை யாராலும் தீண்டி பார்க்க முடியாது, சீண்டி பார்க்கவும் முடியாது. அப்படி செய்தால் அது உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளார்.