ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 மே 2021 (11:01 IST)

மருத்துவமனையில் இடம் இல்லை; மரத்தடியில் சிகிச்சை! – மருத்துவமனைக்கு சீல்!

திருவண்ணாமலையில் மருத்துவமனையில் இடம் இல்லாததால் மரத்தடியில் வைத்து கோரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை உள்ளிட்டவை எழுந்துள்ளதால் மக்கள் காத்திருப்பில் உள்ள சூழலும் உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த தனியார் க்ளினிக் ஒன்றிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நோயாளிகள் அதிகமாக வரவே இடவசதி பற்றாததால் க்ளினிக் எதிரே உள்ள மரத்தடியில் நோயாளிகளை வைத்து சிகிச்சை செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் க்ளினிக்கிற்கு சீல் வைத்ததுடன் அங்கிருந்த 11 நோயாளிகளை திருவண்ணாமலை மற்றும் ஆரணி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.