1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜனவரி 2018 (11:06 IST)

பொங்கல் விடுமுறைக்கு தனியார் பேருந்துகள் - சமாளிக்குமா தமிழக அரசு?

தமிழக போக்குவரத்து ஊழியர்களின் தொடர் போராட்டத்தினால் தனியார் பேருந்துகளை  இயக்கும் முடிவிற்கு தமிழக அரசு வந்துள்ளது.

 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது.  
 
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது.  
 
தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், குறைந்த பேருந்துகளே இயக்கப்படும். மேலும், அனுபவின்மையால் அந்த ஓட்டுனர்கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

 
வருகிற 13ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குவதால், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் வருகிற 12ம் தேதி தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஒருபுறம், போராட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். 
 
அந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜய்பாஸ்கருடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக்கு பின் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

 
பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்வதற்காக 11,983  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதற்காக, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டன.  ஆனால், போராட்டம் காரணமாக அவைகள் செயல்படவில்லை. அதேபோல், ஆன்லைனில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் நபர்களுக்காக தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவிற்கு தமிழக அரசு வந்துள்ளது. ஆனால், அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அளவிற்கு தனியார் பேருந்துகள் கிடையாது. எனவே, தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்களை அழைத்து வந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் பள்ளி பேருந்துகளை இயக்கும் முடிவிற்குக்கு அரசு வந்திருப்பதாக தெரிகிறது.